ராசிபுரம் அரசு கல்லூரியில் 26 மரங்கள் வெட்டிய விவகாரம்: கல்லூரி முதல்வருக்கு ரூ.2.18 லட்சம் அபராதம் 

ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் எந்தவித முன் அனுமதியின்றி 26 மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசுக் கல்லூரி முதல்வருக்கு
ராசிபுரம் அரசு கல்லூரியில் 26 மரங்கள் வெட்டிய விவகாரம்: கல்லூரி முதல்வருக்கு ரூ.2.18 லட்சம் அபராதம் 

ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் எந்தவித முன் அனுமதியின்றி 26 மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசுக் கல்லூரி முதல்வருக்கு ரூ.2.18 லட்சம் அபராதம் விதித்து நாமக்கல் கோட்டாட்சியர் த.மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார். மேலும் வெட்டப்பட்ட மரத்துக்கு ஈடாக 190 மரக்கன்றுகள் நட்டுவைத்து கல்லூரி நிர்வாகம் பராமரிக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 

ராசிபுரம் ஆண்டகளூர்கேட் பகுதியில் திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் சுமார் 3500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். சுமார் 20 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட கல்லூரி வளாகத்தில் எண்ணற்ற பல்வகை மரங்கள் உள்ளன. இந்நிலையில் கல்லூரி வளாகத்தில் உள்ள எண்ணற்ற மரங்கள் எந்திரம் கொண்டு வெட்டப்பட்டு வாகனங்களில் வெளியில் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக வருவாய்த்துறையினருக்கு மாணவர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, அக்.31-ல் வருவாய் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் கல்லூரி வளாகத்தில் ஆய்வு நடத்தினர். இதில் 6 வேப்பமரங்கள், 2 வாகை மரங்கள், 11 ஆயன் மரங்கள் என மொத்தம் 19 மரங்கள் முழுமையாகவும், 7 மரங்கள் கிளைகள் மட்டும் வெட்டி அகற்றப்பட்டுள்ளது தெரியவந்தது. எந்தவித  அரசு முன்னனுமதியின்றி, கல்லூரி முதல்வர் எஸ்.பங்காரு உத்தரவின் பேரில் 17 டன் எடை கொண்ட இந்த மரங்கள் வெட்டப்பட்டு கல்லூரிக்கு வெளியில் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டது விசாரணையில் தெரிந்தது.

ரூ.2.18 லட்சம் அபராதம்:  இதனையடுத்து ராசிபுரம் வட்டாச்சியர் கார்த்திகேயன் இது தொடர்பாக நாமக்கல் கோட்டாட்சியருக்கு  நவ.1-ல் விசாரணை அறிக்கை சமர்பித்திருந்தார். இதனடிப்படையில், வெட்டப்பட்ட  மரங்கள் குறித்த அளவீடு, விலை மதிப்பு குறித்து விசாரணை அறிக்கை வழங்க நாமக்கல் மாவட்ட வனத்துறையினருக்கு கோட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார்.  இதன்பேரில் வனத்துறையினர் கல்லூரி வளாகத்தில் வெடப்பட்ட மரங்கள் வகைகள், எடை அளவீடு, விலை மதிப்பு போன்றவற்றை ஆய்வு செய்தனர். 

இதில்  மொத்தம் 17 டன் எடை கொண்ட வேப்பம், வாகை, ஆயன் என 19 மரங்கள் முழுமையாகவும், 7 மரங்கள் கிளைகளும் வெட்டப்பட்டது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ. 43 ஆயிரத்து 729 என்றும், தேசிய பசுமை தீர்பாயம், சென்னை உயர்நீதிமன்றம், மாவட்ட பசுமைக்குழு உத்தரவின் படி முழுமையாக வெட்டப்பட்ட 19 மரங்களுக்கு ஈடாக மரம் ஒன்று தலா 10 மரக்கன்றுகள் என 190  மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நட்டுவைத்து 8 ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும் என்றும் நாமக்கல் வனக்கோட்ட வன அலுவலர் அறிக்கை சமர்பித்திருந்தார்.

இதன் அடிப்படையில், தற்போது வனத்துறை அறிக்கையினை ஆய்வு செய்த நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் த.மஞ்சுளா, கல்லூரி வளாகத்தில் புதியதாக 190 மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதுடன், வெட்டப்பட்ட மரங்களின் விலை மதிப்புக்கு ஈடாக 5 மடங்கு அபராதமாக மொத்தம் ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 645 அபராதம் கல்லூரி முதல்வர் செலுத்தவும், இதனை வட்டாட்சியர் பெற்று அரசு கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும் கல்லூரி முதல்வர் சு.பங்காரு மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும், உயர் கல்வித்துறை மண்டல இணை இயக்குனருக்கு கோட்டாட்சியர் அறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், கல்லூரி வளாகத்தில் அரசின் அனுமதியின்றி வளர்ந்த மரங்கள் வெட்டிய முதல்வர் உள்ளிட்ட துணை போனவர் மீதும், மரங்கள் வெட்ட பயன்படுத்தப்பட்ட அறுப்பு எந்திரம், ஜேசிபி., லாரி உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி  டிச.13-ல் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாகவும், இதில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிறுவனத் தலைவர்  பி.அய்யாக்கண்ணு பங்கேற்கிறார் என்றும் தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி நிறுவனர் நல்வினை செல்வன் அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com