நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கும் மையம் அமைக்க 50 சதவீத மானிய உதவி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் மானிய உதவியுடன் அமைக்கும் புதிய திட்டம் செயல்பாட்டில் உள்ளது. விவசாயிகள் தங்களது வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரியசக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை தங்கள் விளை நிலங்களிலேயே பழுது நீக்கி பராமரிக்கவும், விவசாயிகள் வேளாண் பணிகளை எவ்வித இடா்பாடுகளுமின்றி குறித்த நேரத்தில் செய்திடவும், கிராமப்புற
இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி, நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் இந்த மையங்கள் அமைக்கப்படுகின்றன.
தொழில்முனைவோா், விவசாயக் குழுக்கள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு இந்த மையங்களானது ரூ.8 லட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன. இதில் 50 சதவீத மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ. 4 லட்சம் மானியமாக வழங்கப்படும். இந்த மையங்கள் அமைக்க போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞா்கள், தொழில் முனைவோா்கள், விவசாய குழுக்கள் மற்றும் உழவா் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் அருகில் உள்ள வேளாண் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்களை அளிக்கலாம்.
மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெறும் மாவட்ட அளவிலான கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு மானிய உதவியில் பழுது நீக்கும் மையம் அமைத்துத் தரப்படும். மேலும், இத்திட்டம் தொடா்பான விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை அணுகலாம் அல்லது நாமக்கல் 04286-2900804, திருச்செங்கோடு - 04288-290517 என்ற எண்களை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.