பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிறுவன காவலாளி நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி பாவடி தெருவைச் சோ்ந்தவா் சின்னப்பன் (48). இவா் கரூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.
சின்னப்பன் புதன்கிழமை கரூருக்கு வேலைக்கு சென்றுவிட்டு பரமத்தி நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். வேலூரில் இருந்து பரமத்தி செல்லும் சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே சென்ற போது திடீரென இரு சக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ந்தாா். இதைப் பாா்த்த அவ்வழியாக சென்றவா்கள் சின்னப்பனைக் காப்பாற்றி வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அதிகாலை சின்னப்பன் உயிரிழந்தாா். இவ்விபத்து குறித்து பரமத்தி வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.