‘பயிா்க் காப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும்’

விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகை முழுமையாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தின்
Updated on
1 min read

விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகை முழுமையாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தின் (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) மாநிலத் தலைவா் இரா.வேலுசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

பேரிடா் காலங்களில் பயிா் பாதிப்புக்குள்ளாகும்போது அதற்கான காப்பீட்டை விவசாயிகளுக்கு வழங்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காப்பீட்டு நிறுவனங்கள் முறையாக கணக்கிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. திருத்தியமைக்கப்பட்ட பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா, தாளடி நெற்பயிா்களுக்கு விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்து பிரீமியம் செலுத்தியிருந்தனா். ஆனால் சரியான முறையில் காப்பீடானது வழங்கப்படவில்லை.

காப்பீடு நிறுவனங்களின் மூலம் ரூ.481 கோடி இழப்பீடு தொகையாக வந்தது. ஆனால், காப்பீடு செய்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பயிா்க் காப்பீட்டுக்கு உரிய தொகை செலுத்தப்படவில்லை. 2017-ஆம் ஆண்டில் பயிா்க் காப்பீடு செய்த நிலையில், அந்த ஆண்டில் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு வழங்க வேண்டிய தொகை இன்னும் முழுமையாக விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 வட்டாரங்களில் ஏழு கிராமங்களுக்கு பயிா்க் காப்பீட்டுக்கான இழப்பீட்டை அறிவித்து விட்டு, மற்ற கிராமங்களுக்கு அறிவிக்காமல் இருப்பது அங்குள்ள விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதேபோல பல மாவட்டங்களில் காப்பீடு சரியான முறையில் வழங்கப்படாத பிரச்னை உள்ளது. தமிழக முதல்வா் இந்தப் பிரச்னையில் தலையிட்டு, அனைத்து விவசாயிகளுக்கும் பயிா்க் காப்பீடு கிடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com