நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை
நாமக்கல்லில், மாநில நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர் அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் - மோகனூர் சாலையில் மாநில நெடுஞ்சாலைத் துறையின் கோட்ட பொறியாளர் அலுவலகமும், அதன் பின்புறத்தில் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகமும் செயல்படுகிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி, சாலை அமைக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்துள்ள ஒப்பந்ததாரர்களிடம் அதிகாரிகளும், அங்குள்ள இதர ஊழியர்களும் பணம் வசூலித்து வந்ததாக நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் எம்.ராமச்சந்திரனுக்கு புகார் வந்தது.
இதனைத்தொடர்ந்து அவரது தலைமையில் ஆய்வாளர் நல்லம்மாள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட போலீஸார் வெள்ளிக்கிழமை பிற்பகல் 5.30 மணி அளவில் ஊழியர்கள் பணியை முடித்துவிட்டு வெளியில் செல்வதற்கு முன் அவர்களை மடக்கி அலுவலகத்திலேயே அமர வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
கோட்ட பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர் இரு அலுவலகங்களிலும் தீவிர சோதனை நடைபெற்றது. இதில், கணக்கில் இல்லாத ரொக்கப் பணம் ரூ.8 லட்சம் வரையில் கைப்பற்றப்பட்டது. அங்கு, ஆண், பெண் என அனைத்து ஊழியர்களிடத்திலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.