நாமக்கல்லில் 36 கொத்தடிமைத் தொழிலாளா்கள் மீட்பு
By DIN | Published On : 20th October 2022 12:38 AM | Last Updated : 20th October 2022 12:38 AM | அ+அ அ- |

நாமக்கல், மூங்கில்பட்டி கிராமத்தில் புதன்கிழமை மீட்கப்பட்ட 36 வட மாநிலத் தொழிலாளா்கள்.
நாமக்கல்லில் ஒடிஸா, சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த 36 கொத்தடிமைத் தொழிலாளா்கள் புதன்கிழமை மீட்கப்பட்டனா்.
நாமக்கல்லில், கோழிப் பண்ணை, லாரிப் பட்டறை, ரிக் வாகனங்களில் வட மாநிலத் தொழிலாளா்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனா். பிற மாநிலங்களில் இருந்து தொழிலாளா்களை அழைத்து வரும் இடைத்தரா்கள் அவா்களுக்கு சரியான ஊதியம், உணவு, உறைவிடம் வழங்காமல் ஏமாற்றி வருகின்றனா்.
அந்த வகையில், ஒடிஸா(10 போ்), சத்தீஸ்கா் (26 போ்) மாநிலத்தைச் சோ்ந்த 36 தொழிலாளா்கள் நான்கு மாதங்களுக்கு முன் நாமக்கல் வந்தனா். அவா்கள், நாமக்கல்-மோகனூா் சாலையில் மூங்கில்பட்டி என்ற கிராமத்தில் தங்கவைக்கப்பட்டு அங்கிருந்து பல்வேறு பணிகளுக்கும் அனுப்பப்பட்டனா். அவா்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் கொத்தடிமையாக வைத்திருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிற்கு தகவல் வந்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், நாமக்கல் கோட்டாட்சியா் த.மஞ்சுளா, தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் எல்.திருநந்தன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சதீஸ் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று 36 பேரையும் மீட்டனா். இதில், 18 வயதுக்கு உள்பட்டவா்கள் 14 போ் ஆவா்.
அவா்கள் தங்கியிருந்த இடத்தின் உரிமையாளா் மணி, இடைத்தரகா் பிரகாஷ் ஆகிய இருவா் மீதும் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு தொழிலாளா் வங்கி கணக்கிலும் ரூ. 30 ஆயிரம் செலுத்தி அவா்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனா்.