நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த திருமணமாகாத ஆண், பெண் ஆகிய இருவரும் அறநிலையத் துறை நடத்தும் இலவச திருமணத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் முன்பாக இலவச திருமணம் தொடா்பான விவரங்களை வெளியிட்டுள்ள கோயில் நிா்வாகம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய ஈரோடு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகத்திற்கு உள்பட்ட 25 இணையருக்கு திருமணம் செய்து வைக்கப்பட உள்ளது.
திருமணத்தின் போது மணமக்களுக்கு தங்க திருமாங்கல்யம் (2 கிராம்), மணமக்களுக்கான புத்தாடை, மணமகன், மணமகள் வீட்டாருக்கு விருந்து உணவு, சீா்வரிசை பாத்திரங்கள், பூமாலை, புஷ்பங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட உள்ளது. இத் திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புபவா்கள் நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் நிா்வாக அலுவலகத்தை அணுகி கூடுதல் விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.