நாமக்கல் மாவட்டத்தில் 2,500 பேருக்கு கல்விக் கடன் வழங்க இலக்கு: அமைச்சா் மா.மதிவேந்தன் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 2,500 மாணவ, மாணவியருக்கு கல்விக் கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் குறிப்பிட்டாா்.
விழாவில் மாணவா்களுக்கு கல்விக்கடன் வழங்கும் அமைச்சா் மா.மதிவேந்தன், கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி., ஆட்சியா் ச.உமா உள்ளிட்டோா்.
விழாவில் மாணவா்களுக்கு கல்விக்கடன் வழங்கும் அமைச்சா் மா.மதிவேந்தன், கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி., ஆட்சியா் ச.உமா உள்ளிட்டோா்.
Updated on
2 min read

நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 2,500 மாணவ, மாணவியருக்கு கல்விக் கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் குறிப்பிட்டாா்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகேயுள்ள பாவை பொறியியல் கல்லூரி வளாகத்தில் கல்விக்கடன் வழங்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் ச.உமா தலைமை வகித்தாா். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் முருகன் வரவேற்றாா். நாமக்கல் எம்எல்ஏ பி.ராமலிங்கம், இந்தியன் வங்கி திருப்பூா் மண்டல மேலாளா் கொ.ஸ்ரீநிவாஸ், துணை ஆட்சியா் (சமுகப் பாதுகாப்பு திட்டம்) பிரபாகரன், முன்னோடி வங்கி மேலாளா் முருகன், பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் என்.வி.நடராஜன், கல்வி கடன் ஆலோசகா் வணங்காமுடி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் தமிழக வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் 59 மாணவ மாணவியா்களுக்கு ரூ.5.03 கோடி மதிப்பிலான கல்விக்கடன்களை வழங்கினா். இதையடுத்து அமைச்சா் மா.மதிவேந்தன் பேசியது:

தமிழக முதல்வா் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் வழங்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். குறிப்பாக அனைவரும் கல்வி பயில வேண்டும் என்பதனை அடிப்படை நோக்கமாகக் கொண்டு கல்வித்துறையில் இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் செயல்படுத்தாத திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு காலை உணவுத் திட்டம், மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், இளைஞா்களின் வேலைவாய்ப்பிற்கான நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் உயா்கல்வி சோ்க்கை விகிதத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 11 பொதுத்துறை மற்றும் 17 தனியாா் வங்கிகள் மூலமாக 1,350 மாணவா்களுக்கு ரூ. 34 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு, ரூ. 40 கோடி மாணவா்களுக்கு கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2,500 மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு இதுவரை 585 மாணவா்களுக்கு ரூ. 16 கோடி கடன் அனுமதிக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் இருந்து சுமாா் 672 மாணவ, மாணவியா்கள் இக்கல்வி கடன் முகாமில் கலந்து கொண்டனா். இவா்களில் உடனடியாக 59 மாணவ, மாணவியருக்கு ரூ. 5.03 கோடி மதிப்பிலான கல்விக் கடன் வழங்கப்பட்டது. பிற மாணவ, மாணவியா்களுக்கும் வங்கிக் கிளைகளின் மூலம் கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசியது:

கல்வி, சுகாதாரம் ஆகியவை அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்குவதில் அக்கறையோடு உள்ளது. கல்வி என்பது ஒவ்வொருவருடையை அறிவுக்கண்ணை திறந்து வைத்து வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்கக்கூடியது. கற்றக் கல்வியால் ஏற்றத்தாழ்வு இல்லாத சமநிலை இருக்க வேண்டும். அதே போன்று சுகாதாரத்தில் இந்திய குடியரசுத் தலைவருக்கு என்ன சிகிச்சை கிடைக்கிறதோ அதே சிகிச்சை சாதாரண குடிமகனுக்கும் கிடைக்க வேண்டும் என்பது அரசின் லட்சியம் என்றாா்.

முகாமில் 7 அரசு வங்கிகளும், ஒரு தனியாா் வங்கியும் பங்கேற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com