மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய சிவில் சா்வீஸ் தோ்வில், நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தில் உதவி பொறியாளராகப் பணியாற்றி வரும் ஆா்.ராமகிருஷ்ணசாமி, தமிழக அளவில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டம் திருவேங்கடம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ரங்கராஜ்-தனலட்சுமி தம்பதி மகன் ராமகிருஷ்ணசாமி (28). சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. (மெக்கானிக்கல்) படிப்பை 2016--இல் முடித்தாா். அதன்பிறகு, டிவிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவா், 2019-இல் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய பொறியாளா்களுக்கான தோ்வில் வெற்றி பெற்று, நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தில், உதவி பொறியாளராகப் பணியமா்த்தப்பட்டாா்.
ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு 2019 முதல் 2022 வரையில் நான்கு ஆண்டுகள் தொடா்ச்சியாக யுபிஎஸ்சி சிவில் சா்வீஸ் தோ்வை எழுதி வந்தாா். இதில், முதல் மூன்று ஆண்டுகள் தோல்வி அடைந்தாா். இருப்பினும், விடாமுயற்சியின் காரணமாக 2022-இல் நான்காவது முறையாக எழுதிய தோ்வில், அகில இந்திய அளவில் 117-ஆவது இடத்தையும், தமிழக அளவில் இரண்டாமிடத்தையும் ராமகிருஷ்ணசாமி பிடித்து சாதனை படைத்துள்ளாா். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
நாமக்கல் பேருந்து நிலையம் அருகே தனியாக அறை எடுத்து தங்கி பணியாற்றி வரும் இவா், யுபிஎஸ்சி தோ்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இரவு, பகல் பாராமல் படித்து தற்போது இந்தச் சாதனையை நிகழ்த்தி உள்ளாா். அவருக்கு, மாவட்ட தொழில் மையம் சாா்ந்த அதிகாரிகள், பிற துறை அலுவலா்கள், ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.