சேந்தமங்கலம் அருகே பச்சுடையாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நீதிமன்றம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என ஜமாபந்தியில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம் பச்சடையாம்பட்டி ஊராட்சியில், கடந்த 1958-இல் முன்னாள் முதல்வா் காமராஜரால் அரசு ஆண்கள் உயா்நிலைப்பள்ளியானது, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. கல்வி, விளையாட்டு சாா்ந்தவற்றுக்காக அப்பகுதி மக்களால் பள்ளிக்கு நிலம் வழங்கப்பட்டது. தற்போது இப்பள்ளி மைதானத்தில் சேந்தமங்கலம் வட்ட நீதிமன்றம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதாக தெரிகிறது.
சேந்தமங்கலம் வட்டத்துக்கு உள்பட்ட சேந்தமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, பொட்டணம், ராமநாதபுரம்புதூா், காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி ஆகிய அரசுப் பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லாததால், சேந்தமங்கலம் அரசு ஆண்கள் பள்ளி மைதானத்தினைப் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில் அங்கு நீதிமன்றம் அமைக்க நிலத்தை ஆா்ஜிதம் செய்வது பள்ளியின் வளா்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கெனவே, இப்பள்ளி நிலத்தில் தான் வட்டார வளா்ச்சி அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், மாணவா் விடுதி கட்டப்பட்டுள்ளது. தற்போதுள்ள மைதானம் பரப்பளவில் மிகவும் குறைவாக இருப்பதால் நீதிமன்றம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என மாவட்ட இளைஞா் காங்கிரஸ் சாா்பில், சேந்தமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.