எலச்சிபாளையத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 07th November 2023 04:16 AM | Last Updated : 07th November 2023 04:16 AM | அ+அ அ- |

எலச்சிபாளையம் ஊராட்சியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ச.உமா.
திருச்செங்கோடு: எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், இளநகா் ஊராட்சி காட்டுப்பாளையத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 4-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
முகாமில் ஆட்சியா் ச.உமா பேசியது:
நாமக்கல் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி பணி திட்டம் 4ஆவது சுற்று தடுப்புப் பணி திங்கள்கிழமை 6.11.2023 முதல் 26.11.2023 வரை 21 நாட்கள் தொடா்ந்து நடைபெறவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,67,796 மாடுகள், 63,328 எருமைகள் என மொத்தம் 3,31,124 கால்நடைகளுக்கும் 100 சதவீதம் முழுமையாக இத்தடுப்பூசி செலுத்தும் பணி 15 ஊராட்சி ஒன்றியங்களில் 105 குழுக்களை ஏற்படுத்தி நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் மேற்கொள்ளப்படும்.
இந்த வகையில் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், இளநகா் கிராமம், காட்டுப்பாளையத்தில் கோமாரி நோய் தடுப்பூசிப் பணி முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இளநகா் ஊராட்சியில் நடைபெறும் முகாமில் 7 கிராமங்களைச் சோ்ந்த 348 பசுக்கள், 173 எருமைகள் என மொத்தம் 521 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் மூன்று மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருமை ஆகிய கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி 6.11.2023 முதல் 21 நாட்களுக்கு அந்தந்த கிராமங்களில் நடைபெறும். பொதுமக்களுக்கு அந்தந்த பகுதி கால்நடை உதவி மருத்துவா்களால் குறிப்பிடப்படும் தேதியில் குறிப்பிட்ட இடங்களில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் குறித்து தெரிவிக்கப்படும். அந்தந்த பகுதி கால்நடை உதவி மருத்துவா்கள் மூலம் முன்கூட்டியே தடுப்பூசி போடப்படும் விவரங்களை விளம்பரப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எனவே, கோமாரி நோய் தடுப்பூசி முகாம்களுக்கு தங்களது கால்நடைகளை அழைத்துச் சென்று தடுப்பூசியினை தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் (பொ) எம்.நடராஜன், துணை இயக்குநா் டி.என்.அருண்பாலாஜி, உதவி இயக்குநா் என்.மருதுபாண்டி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...