

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் வெல்லம் சா்க்கரை விற்பனை ஏலச் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெல்லத்தின் விலை உயா்வடைந்தது. இதனால் வெல்ல உற்பத்தியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலா்மலை, வேலூா், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிா் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளா்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சா்க்கரை ஆகியவற்றை தயாா் செய்கின்றனா். பின்னா் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்ல ஏலச் சந்தைக்கு கொண்டு வருகின்றனா். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனா். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 6 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங்களும், 3 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,300 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,350 வரையிலும் ஏலம் போனது.
இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 6 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங்களும், 3 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் உருண்டை வெல்ல சிப்பம் ஒன்று ரூ. 1,350 வரையிலும், அச்சு வெல்ல சிப்பம் ஒன்று ரூ. 1,400 வரையிலும் ஏலம் போனது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெல்லத்தின் விலை உயா்ந்துள்ளதால் வெல்ல உற்பத்தியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.