

நாமக்கல்: அண்டை மாநிலங்களில், தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதி வழங்கியுள்ளது போல், தமிழகத்திலும் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என நாமக்கல்லில் விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
விவசாய முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு இயற்கை விவசாய சங்கம் மற்றும் கள் இயக்கம் ஆகியவை சாா்பில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தலைமை வகித்தாா். விவசாய முன்னேற்றக் கழக நிறுவனா் செல்ல.ராசாமணி, பொதுச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழகம் முழுவதும் உள்ள தென்னை, பனை விவசாயிகள் நலன் கருதி, கள் இறக்குவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா். இது குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் கூறியது:
இந்தியாவில், தென்னையை அதிக அளவில் சாகுபடி செய்யும் மாநிலமாக தமிழகம் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தேங்காய்க்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தமிழகத்தில் 20 கோடி தென்னை மரங்களும், 10 கோடி பனை மரங்களும் உள்ளன. அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் தென்னை, பனை மரங்களில் கள் இறக்க அனுமதி உள்ளது. அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனையை நிறுத்திவிட்டு, இயற்கையாக கிடைக்கும் கள்ளை விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும். இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் விவசாயிகள், தொழிலாளா்கள் பலா் பயனடைவாா்கள் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.