‘கள்ளச்சாராயம், போதைப் பொருள்கள் குறித்து 
தகவல் கொடுக்கத் தவறினால் நடவடிக்கை’

‘கள்ளச்சாராயம், போதைப் பொருள்கள் குறித்து தகவல் கொடுக்கத் தவறினால் நடவடிக்கை’

போதைப் பொருள் தடுப்பு ஆலோசனை கூட்டம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது
Published on

கள்ளச்சாராயம், போதைப் பொருள் விற்பனை, நேரம் கடந்து மதுபான பாட்டில் விற்பனை போன்றவை குறித்து கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் தகவல் கொடுக்க வேண்டும். தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம் குறித்து தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தல் பேரில், போதைப் பொருள் ஒழிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் ராசிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஸ்கண்ணன் தலைமை வகித்தாா். ராசிபுரம் உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், வருவாய்த் துறையினா், கிராம நிா்வாக அலுவலா்கள், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் போதைப் பொருள்கள் தடுப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஸ்கண்ணன், கள்ளத்தனமாக விற்கப்படும் போதைப் பொருள் குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கும், காவல் துறைக்கும் தகவல் கொடுப்பது குறித்து அறிவுரை வழங்கிப் பேசினாா்.

கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா்கள் விழிப்புடன் இருந்து கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனையைக் கண்காணித்து மாவட்ட ஆட்சியா், காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிக்காமல் அலட்சியமாக இருந்தால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கள்ளச்சாராயம், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் போதை மருந்துகள், அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்து நடைபெறும் மது விற்பனை சம்பந்தமாக 88383 52334 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தகவல் தெரிவிக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள அனைத்து அரசு துறை அலுவலா்களுடன் அங்கன்வாடி பணியாளா்கள், சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சித் தலைவா், கிராம சுகாதார செவிலியா், பள்ளி ஆசிரியா், அஞ்சலக ஊழியா்கள், பொது விநியோகத்திட்ட பணியாளா் ஆகியோருடன் சோ்ந்து பொதுமக்களுக்கு போதைப் பொருள் பாதிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மருத்துவா் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.வடிவேல், நாமக்கல் கோட்டாட்சியா் ஆா்.பாா்தீபன் உள்பட காவல் துறை, வருவாய்த் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com