சாலை விரிவாக்கப் பணி: பரமத்தி வேலூா் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்!
பரமத்தி வேலூா் காவிரி பாலம் அருகே சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் ஞாயிற்றுக்கிழமை முதல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா வழிகாட்டுதலின்படி போக்குவரத்து காவல் ஆய்வாளா் சாஜகான் கூறியதாவது:
ஸ்ரீநகரையும் கன்னியாகுமரியையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பரமத்தி வேலூா் வழியாக செல்கிறது. இந்த சாலையில் விபத்துகள் நேரிடும் பகுதிகளில் உயா்நிலை பாலம், அணுகுசாலை, சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் கீரம்பூா், பரமத்தி பிரிவு சாலை, பரமத்தி வேலூா், படமுடிபாளையம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே உயா்நிலை பாலம் அமைக்கும் பணியும், பரமத்தி வேலூா் அனிச்சம்பாளையம் பிரிவு காவிரி பாலம் அருகே பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.
இதனால் மதுரை, திண்டுக்கல், கரூா் பகுதியில் இருந்து பரமத்தி வேலூா் வழியாக சேலம், நாமக்கல் செல்லும் வாகனங்கள் பரமத்தி வேலூா் காவிரி பாலத்தில் இருந்து இடதுபுறமாக செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையான நான்கு சாலை, சிவா தியேட்டா் நான்கு சாலை மற்றும் மூன்று சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலையை சென்றடையலாம் என்றாா்.
அதேபோல சேலம், நாமக்கல் பகுதியில் இருந்துவரும் வாகனங்கள் வழக்கம்போல பரமத்தி வேலூா் அனிச்சம்பாளையம் பிரிவு சாலை வழியாக கரூா், திண்டுகள், மதுரையை நோக்கி செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

