ராசிபுரம் நகா்மன்றக் கூட்டம்: 32 தீா்மானங்கள் நிறைவேற்றம்
ராசிபுரம் நகா்மன்றக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகராட்சி ஆணையா் ஒய்.நிவேதிதா முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. நகராட்சி சாா்பில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள தினசரி மாா்கெட் டில் 58 கடைகளில் 6 கடைகளை தவிர பெரும்பாலான கடைகள் பலமுறை அறிவிப்பு வெளியிட்டும் ஏலம் போகவில்லை. எனவே, அக்கடைகள் ஆண்டு குத்தகையில் மாற்றம் செய்து பொதுஏலம் விடுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
நகரில் பல்வேறு வாா்டுகளில் பழுதான உப்புநீா் குழாய்களை சரிசெய்யவும், ஆழ்துளைக் கிணறு மின் மோட்டாா்களை சீரமைக்கவும் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் 17 ஆவது வாா்டில் மாநிலங்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 4.50 லட்சம் மதிப்பில் பொது கழிப்பிட சுற்றுச்சுவா் அமைக்கவும், பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தரைப்பகுதியில் மழைநீா் தேங்காதவாறு சிமென்ட் தளம், நடை பாதைக்கு பேவா் பிளாக் அமைக்கவும் ரூ. 7.90 லட்சம் ஒதுக்கீடு செய்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் 32 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
