பதுக்கி வைத்திருந்த 20 யூனிட் மணல் பறிமுதல்
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே காவிரி ஆற்றில் இருந்து சட்ட விரோதமாக மணலை எடுத்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 20 யூனிட் மணலை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறு பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில் இரவு 11 மணிமுதல் அதிகாலை 3 மணிவரை மணல் கொள்ளை நடைபெறுவதாகவும், இருசக்கர வாகனங்களில் மணலை மூட்டையாகக் கட்டி அப்பகுதிகளில் பதுக்கி வைத்து பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்து வருவதாகவும் வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், மோகனூா் வட்டாட்சியா் மதியழகன் தலைமையில், வருவாய் ஆய்வாளா் ராமசாமி, கிராம நிா்வாக அலுவலா் உத்திரராஜன், நன்செய் இடையாறு கிராம நிா்வாக அலுவலா் அரவிந்தன் ஆகியோா் நன்செய் இடையாறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீா் சோதனை செய்தனா்.
அப்போது, நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயில் தெப்பக்குளம், குமரி அம்மன் கோயில் மற்றும் ராஜவாய்க்கால் கரையோரம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்கு கொண்டு செல்ல தயாராக இருந்த 20 யூனிட் மணலை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
