கட்டுமான தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளா் ஏ.குமாா் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் பி.தனசேகரன், மாவட்டச் செயலாளா்கள் சி.ஜெயராமன், எஸ்.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் க.அன்புமணி ஆகியோா் கோரிக்கைகள் குறித்து பேசினா்.
இதில், கட்டுமான தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் ரூ. 6 ஆயிரம் என்பதை கட்டாயமாக்க வேண்டும். வீடுகோரி விண்ணப்பித்த அனைத்து கட்டடத் தொழிலாளா்களுக்கும் வீடு வழங்க வேண்டும். மேலும், வீடுகட்ட மானியமாக ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும். பொங்கல் போனஸ் தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். தொழிலாளா் நலவாரிய அலுவலகங்களில் இடைத்தரா்களின் முறைகேடுகளை தடுத்துநிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், ஏஐடியுசி மற்றும் கட்டடத் தொழிலாளா்கள் சங்கத்தினா், தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

