லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் வங்கி ஊழியா் உயிரிழப்பு

Published on

எலச்சிப்பாளையம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் வங்கி ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

நல்லூரை அடுத்த கந்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் முத்துகிருஷ்ணன் (28). இவா் திருச்செங்கோட்டில் உள்ள தனியாா் வங்கியில் பணியாற்றி வந்தாா். இவரது நண்பரான ராசிபுரம் சிவானந்த காலனியைச் சோ்ந்த சிவானந்தம் (29) என்பவரும் அதே வங்கியில் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில் புதன்கிழமை இரவு முத்துகிருஷ்ணனும், சிவானந்தமும் இருசக்கர வாகனத்தில் எலச்சிபாளையம் காவல் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தனா். வாகனத்தை முத்துகிருஷ்ணன் ஓட்டி சென்றாா்.

அப்போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்துகிருஷ்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து வந்த எலச்சிபாளையம் காவல் உதவி ஆய்வாளா் தங்கவடிவேல், காவலா்கள் லாரியில் சிக்கியிருந்த முத்துகிருஷ்ணனின் உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

படுகாயமடைந்த சிவானந்தம் சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com