அரசு மருத்துவக் கல்லூரியில் ‘தூய்மை மிஷன் 4.0’ இயக்கம்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்ட கழிவுகளை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.
Published on

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், ‘தூய்மை மிஷன் 4.0’ கழிவு சேகரிப்பு இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இந்தக் கழிவு சேகரிப்பு நிகழ்வு நடைபெறுகிறது.

அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் தூய்மை உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மருத்துவமனை கண்காணிப்பாளா் குணசேகரன், நிலைய மருத்துவ அலுவலா் லீலாதரன், அனைத்து மருத்துவ துறைத் தலைவா்கள், செவிலியா் கண்காணிப்பாளா்கள், அமைச்சுப் பணியாளா்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அப்புறப்படுத்தப்பட்டு தரம்பிரித்து வைக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள், நெகிழி கழிவுகள், மின்னணு கழிவுகள், அட்டைக் கழிவுகள், மரச்சாமான்கள், இரும்புக் கழிவுகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்வில், திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) சு.வடிவேல், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் (பொ) இரா.குணசேகரன் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com