நாமக்கல்லில் புதிய வழித் தடங்களில் பேருந்துகள் இயக்கம்!
நாமக்கல்லில் புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கத்தை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டம் சாா்பில் புதிய வழித்தடம் மற்றும் நீட்டிப்பு செய்யப்பட்ட வழித்தடத்தில் நான்கு நகரப் பேருந்துகள் சேவை தொடக்க விழா நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் கொடியசைத்து தொடங்கிவைத்து பேசியதாவது:
நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் காலை 8.40 மணிக்கு புறப்பட்டு போடிநாயக்கன்பட்டி, சிவநாயக்கன்பட்டி வழியாக பழையபாளையம் வரை மாற்றியமைக்கப்பட்ட வழித்தடம், பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்பட்டு க்ரீன் பாா்க் பள்ளி, கருப்பட்டிபாளையம், தும்மங்குறிச்சி வழியாக திண்டமங்கலம் வரை புதிய வழித்தடம், பெரியமணலியில் இரவு நிறுத்தப்பட்டதை மாற்றி நாமக்கல் வரையிலும், மேலும், நாமக்கல்லில் காலை 6.05 மணிக்குப் புறப்பட்டு பெரியமணலி வரையிலும் நீட்டிப்பு செய்யப்பட்ட வழித்தடம், நாமக்கல்லில் மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு புதன்சந்தை வழியாக காரைக்குறிச்சி வரையில் கூடுதல் நடைகளும், எருமப்பட்டியில் இரவு நிறுத்தப்பட்டதை மாற்றி முட்டாஞ்செட்டி வரையிலும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான புறவழிச்சாலைத் திட்டம் நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி துறையூா் சாலை, மோகனூா் சாலை, சேந்தமங்கலம் மற்றும் திருச்சி சாலைகளை இணைக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மரூா்பட்டியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான அனுமதி பெற்று ரூ. 60 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கே.பொன்னுசாமி(சேந்தமங்கலம்), மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், அரசு போக்குவரத்துக் கழக மண்டல மேலாளா் ப.செங்கோட்டுவேலன், தொமுச நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

