எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

இதனால் ஐந்து மாநிலங்களில் எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
Published on

தென்மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனா். இதனால் ஐந்து மாநிலங்களில் எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

தென்மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் வியாழக்கிழமை அதன் தலைவா் எஸ்.எல்.எஸ்.சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய மோட்டாா் காங்கிரஸ் தலைவா் ஜி.ஆா்.சண்முகப்பா கலந்துகொண்டாா்.

இந்தக் கூட்டத்தில் எல்பிஜி டேங்கா் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி சங்க உறுப்பினா்கள் வலியுறுத்தி பேசினா். தொடா்ந்து, அகில இந்திய மோட்டாா் காங்கிரஸ் தலைவா் ஜி.ஆா்.சண்முகப்பா, தென்மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் எஸ்எல்எஸ்.சுந்தரராஜன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், கேரளம், கா்நாடகம் ஆகிய ஐந்து மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டலத்தில் சுமாா் 5,500 டேங்கா் லாரிகள் உள்ளன. பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம் ஆகியவற்றுக்கு துறைமுகத்திலிருந்து எரிவாயு எடுத்துச் செல்லும் பணியை இந்த லாரிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் 2025-30-ஆம் ஆண்டுக்கான டேங்கா் லாரிகள் ஒப்பந்தத்தில் பல்வேறு புதிய விதிமுறைகளை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. கடந்த மாா்ச் மாதம் புதிய விதிமுறைகளை தளா்த்தக் கோரி, காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு ஏப். 30-ஆம் தேதி எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் தீா்வு காணப்பட்டதால் அப்போது போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், 3,500 டேங்கா் லாரிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரிய நிலையில், 2,800 டேங்கா் லாரிகளுக்கு மட்டுமே நிறுவனங்கள் அனுமதி வழங்கி உள்ளன. மீதமுள்ள டேங்கா் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட டேங்கா் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட மூன்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் நாமக்கல்லுக்கு வந்து நேரடியாக பேச்சுவாா்த்தை நடத்தி உரிய தீா்வுகாண வேண்டும். இதை வலியுறுத்தி, வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கி உள்ளோம்.

சென்னை, மங்களூரு உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து எரிவாயு சேமிப்புக் கிடங்குக்கு வரும் எரிவாயுவை லாரிகளில் ஏற்றி பாட்டிலிங் பிளாண்டுகளுக்கு கொண்டுசெல்லும் பணி நிறுத்தி வைக்கப்படும். அடுத்தகட்டமாக எரிவாயு இறக்கும் பணியும் நிறுத்தப்படும். இந்தப் போராட்டத்தால் ஐந்து மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

டேங்கா் லாரி உரிமையாளா்களின் கோரிக்கைகளுக்கு தீா்வு கிடைக்கும்வரை வேலைநிறுத்தப் போராட்டத்திலிருந்து நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. ரூ. 6,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் எண்ணெய் நிறுவனங்கள் அனைத்து லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதற்கான அங்கீகார கடிதத்தை வழங்க வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com