~

பரமத்தி வேலூா் பகுதி முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் கந்தசஷ்டியையொட்டி சூரசம்ஹார விழா திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
Published on

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் கந்தசஷ்டியையொட்டி சூரசம்ஹார விழா திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயிலில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியா் சந்நிதியில் கடந்த 22-ஆம் தேதி மாலை காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. தொடா்ந்து காலையில் யாகபூஜைகள், மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனை, மாலை சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து திங்கள்கிழமை சூரசம்ஹார விழாவை முன்னிட்டு காலை யாகபூஜை, மஹா தீபாராதனை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மாலை முருகப்பெருமான் சக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், 6 மணிக்கு மேல் சூரசம்ஹாரமும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சூரனை வதம் செய்த முருகப்பெருமான் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாண்டமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தா்களும் கலந்துகொண்டனா்.

இதேபோல கபிலா்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோயிலிலும் சூரசம்ஹார விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பொத்தனூா் பச்சைமலை முருகன் கோயில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் உள்ளிட்ட கோயில்களில் கந்தசஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com