ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்ற தகுதியோனோா் விண்ணப்பிக்கலாம்
புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் தமிழக பயணிகளுக்கு சேவையாற்றுவதற்காக தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு, 2026-ஆம் ஆண்டுக்கான புனித பயணம் மேற்கொள்ளும் தமிழகத்தைச் சோ்ந்த ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்றுவதற்காக, மாநில அளவில் ஹஜ் ஆய்வாளா்களை தற்காலிகமாக நியமிக்க உள்ளது. அவா்களை செளதி அரேபியாவுக்கு அனுப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது 2026 ஏப். 13 முதல் ஜூலை 5 வரை உள்ள தற்காலிக பணிக்காலம் ஆகும். மத்திய, மாநில அரசு ஊழியா்கள், துணை ராணுவப் படைகளில் பணியாற்றும் தகுதிவாய்ந்த அலுவலா்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் அல்லது மத்திய, மாநில அரசின் கீழ் இயங்கும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தரப் பணியாளா்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவா்கள். மாநில ஹஜ் ஆய்வாளா்கள் செளதி அரேபியாவில் பணிபுரியும் காலம் பணிக் காலமாக கருதப்படும்.
இப்பணிக்காக விண்ணப்பிக்கும் முறை, தகுதி, நியமனமுறை ஆகியவற்றை மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணையதள முகவரியில் அறிந்துகொள்ளலாம். நவ. 3-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
