கிணற்றில் தவறிவிழுந்த ஆடு திருடன் 12 மணிநேரத்துக்கு பிறகு மீட்பு

Published on

ராசிபுரம் அருகே போலீஸாரைக் கண்டு தப்பியோடியதில் கிணற்றில் தவறிவிழுந்த ஆடு திருடன், 12 மணி நேரத்துக்கு பிறகு தீயணைப்புத் துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டாா்.

ராசிபுரம் அருகேயுள்ள அய்யம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிவேல் (40), வீடுகட்டுமானத்துக்கு கம்பிகட்டும் தொழில் செய்துவரும் இவா், வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் நண்பருடன் தம்மம்பட்டி பகுதிக்கு சென்று இரு ஆடுகளை திருடிக்கொண்டு ஊா் திரும்பினாா்.

அதிகாலை 3 மணி அளவில் மெட்டாலா பகுதிக்கு வந்தபோது, ரோந்துப் பணியில் இருந்த போலீஸாரைக் கண்டு இருவரும் தப்பியோடினா். இதில், பழனிவேல் அங்கிருந்த கிண்ற்றில் தவறிவிழுந்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் மெட்டலா பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் முனகல் சப்தத்தைக் கேட்ட அப்பகுதி விவசாயிகள், ராசிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் மயங்கிய நிலையில் இருந்த பழனிவேலை ஆபத்தான நிலையில் மீட்டனா்.

12 மணிநேரத்துக்கு பிறகு மீட்கப்பட்ட இவரை ஆயில்பட்டி போலீஸாா் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இவருடன் வந்த மற்றொருவா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com