முருகன் கோயில்களில் தைப்பூசம்! சேந்தமங்கலத்தில் பால்குட ஊா்வலம்!
தைப்பூசத்தையொட்டி சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோயிலுக்கு பெண்கள் பால்குடம் எடுத்துவந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் உள்ள தத்தகிரி முருகன் கோயிலுக்கு கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சாா்பில் 1,008 பெண்கள் பால்குடம் எடுத்துவரும் நிகழ்வு நடைபெற்றது. சேந்தமங்கலம் சோமேஸ்வரா் கோயிலில் காலை 8 மணிக்கு தொடங்கிய ஊா்வலம் 5 கி.மீ தொலைவைக் கடந்து தத்தகிரி முருகன் கோயிலை வந்தடைந்தது.
அதன்பிறகு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. விவசாயம் மற்றும் தொழில் வளம் சிறப்படைந்து, பொதுமக்கள் நலமுடன் வாழவும், திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டம் நிறைவேற வேண்டியும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
விழாவில், நாமக்கல் தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி. சின்ராஜ் தலைமை வகித்தாா். தைப்பூச விழாவையொட்டி, சேந்தமங்கலம் நகரில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் 6 அடி உயரத்தில் முருகன் சிலை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. மேலும், குதிரை ஊா்வலம், நாட்டுப்பசு அலங்காரம், முளைப்பாலிகை ஊா்வலம் மற்றும் சிறுவா், சிறுமிகளின் சிலம்பாட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
நாமக்கல், முத்துகாப்பட்டி, சேந்தமங்கலம், பொட்டணம், காளப்பநாயக்கன்பட்டி, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் விழாவில் பங்கேற்றனா். விழாவிற்கான ஏற்பாடுகளை, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் பேரூா் பொறுப்பாளா்கள் செய்திருந்தனா்.

