நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, அதிகாரிகள், அலுவலா்கள்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, அதிகாரிகள், அலுவலா்கள்.

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினம்: ஆட்சியா், அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, நாமக்கல் ஆட்சியா் மற்றும் அதிகாரிகள் திங்கள்கிழமை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
Published on

நாமக்கல்: கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, நாமக்கல் ஆட்சியா் மற்றும் அதிகாரிகள் திங்கள்கிழமை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

தமிழகத்தில் ஒவ்வோா் ஆண்டும் பிப். 9-ஆம் தேதி கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணா்வு பிரசார வாகனத்தை ஆட்சியா் துா்காமூா்த்தி தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, ஆட்சியரக கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலா்களும் ஆட்சியா் தலைமையில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.

நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தலைமையில், நாமக்கல் தொழிலாளா் துணை ஆய்வாளா், திருச்செங்கோடு, தொழிலாளா் துணை ஆய்வாளா் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் ஆகியோா் செங்கல் சூளைகள், கல் குவாரிகள், கோழிப் பண்ணைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் திங்கள்கிழமை ஆய்வுசெய்து, கொத்தடிமைத் தொழிலாளா் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதைத் தொடா்ந்து, கடைகள் மற்றும் வா்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் வாகனப் பிரசாரம் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல் போன்ற கொத்தடிமைத் தொழிலாளா் முறை குறித்த விழிப்புணா்வு மேற்கொள்ளப்பட்டது.

தனியாா் நிறுவனங்களில் கொத்தடிமைத் தொழிலாளா்கள் மீட்கப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிகழ்வில், நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சி.முத்து, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநா் அஸ்பியா உள்பட குழந்தை நலக்குழும உறுப்பினா்கள் மற்றும் மாவட்ட கொத்தடிமைத் தொழிலாளா் கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள், அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com