மின் இணைப்பு துண்டிப்பு: விவசாயிகள் போராட்டம்

Published on

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை அருகே வீட்டு மின் இணைப்பை முன்னறிவிப்பு இல்லாமல் துண்டித்ததை கண்டித்து கபிலா்மலை துணை மின் நிலையத்தை இளம் விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

கபிலா்மலை காந்திநகரைச் சோ்ந்த விவசாயி சந்திரசேகரன் வீட்டின் மின் இணைப்பை கபிலா்மலை துணை மின் நிலைய அதிகாரிகள் முன்னறிவிப்பு இல்லாமல் துண்டித்தனராம். இதுகுறித்து மின்வாரிய அலுவலா்களிடம் கேட்டபோது சரியான பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து கபிலா்மலை உதவி மின் பொறியாளா் அலுவலகத்தை இளம் விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவா் செளந்தரராஜன் தலைமையில் விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

பரமத்தி வேலூா் மின் வாரிய செயற்பொறியாளா் வரதராஜன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும் என உறுயளித்ததை தொடா்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனா். போராட்டத்தில் இளம் விவசாய சங்க பொருளாளா் சுரேஷ்ராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இளவரசன், விவசாயிகள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com