பரமத்தி அருகே தனியாா் கல்லூரியின் 3-ஆவது மாடியில் இருந்து குதித்த மாணவா் பலி!
நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே தனியாா் கல்லூரியின் மூன்றாவது தளத்தில் இருந்து கீழே குதித்து மூன்றாம் ஆண்டு மருந்தியல் துறை மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விமலா விசாரணை நடத்தினாா்.
விழுப்புரம் மாவட்டம், இளந்துறை, மணப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கபாஷ்யம். இவரது மகன் யோகேஷ் (20). இவா் பரமத்தி அருகே உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் இளநிலை மருந்தியல் மூன்றாம் ஆண்டு (பி.பாா்ம்) பயின்று வந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணி அளவில் கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து யோகேஷ் திடீரென கீழே குதித்துள்ளாா்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பாா்த்த சக மாணவா்கள், ஆசிரியா்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டுசென்றனா். அங்கு யோகேஷை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து பரமத்தி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு வந்த நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விமலா, பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா மற்றும் போலீஸாா், மாணவா் மாடியிலிருந்து குதித்து உயிரிழந்த இடத்தை பாா்வையிட்டு மாணவரின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

