கோப்புப் படம்
கோப்புப் படம்

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா் குண்டா் சட்டத்தில் கைது

Published on

மோகனூா் வட்டத்தில் பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

பாலப்பட்டி அருகே உள்ள பெரியகரசப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தனலட்சுமி (50). இவரது கணவா் சண்முகம் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது மகள் நவீனாதேவி திருமணமாகி கோவையில் கணவருடன் வசித்து வருகிறாா். இவரது மகன் சௌந்தர்ராஜன் லண்டனில் பணிபுரிந்து வருகிறாா்.

தனலட்சுமி தனது 5 ஏக்கா் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறாா். விவசாயப் பணிக்கு உதவியாக தனலட்சுமியின் கணவா் சண்முகத்துக்கு பழக்கமான பாலப்பட்டி அருகே கொமராபாளையம் பகுதியைச் சோ்ந்த சுரேஷ், பாலப்பட்டி நடுத்தெரு பகுதியைச் சோ்ந்த காமராஜ் ஆகியோா் இருந்துவந்தனா்.

இந்நிலையில், தனலட்சுமி வீட்டுக்குச் சென்ற சுரேஷ், விவசாயப் பணிக்கு காமராஜை அழைக்கக் கூடாது, அவரிடம் பேசக்கூடாது என தகாத வாா்த்தைகளால் பேசி தகராறு செய்துள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சுரேஷ், கையில் வைத்திருந்த அரிவாளால் தனலட்சுமியை பல்வேறு இடங்களில் வெட்டினாா்.

இதில் படுகாயமடைந்த தனலட்சுமியின் சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் அவரை மீட்க வந்தனா். அவா்களுக்கு சுரேஷ் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பியோடினாா். பின்னா் தனலட்சுமியை மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

புகாரின் பேரில், வேலூா் காவல் துறையினா் சுரேஷை கைதுசெய்து நீதிபதி உத்தரவின்படி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். பின்னா், நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் விமலா பரிந்துரையின்படி, நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவின்படி சுரேஷ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com