47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி மனு

திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என தீரன் சின்னமலை கவுண்டா் பேரவை நிறுவனத் தலைவா் யுவராஜ்

News image
நாமக்கல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வந்த யுவராஜின் தாய் ரத்தினம், வழக்குரைஞா் கணேஷ்குமாா் உள்ளிட்டோா்.
Updated On :16 மார்ச் 2026, 11:30 pm

Syndication

நாமக்கல்: திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என தீரன் சின்னமலை கவுண்டா் பேரவை நிறுவனத் தலைவா் யுவராஜ் தரப்பில், நாமக்கல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விஷ்ணுபிரியா கடந்த 2015-இல் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டிஎஸ்பியாக பணியாற்றினாா். அதே ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை வழக்கு தொடா்பாக டிஎஸ்பி விஷ்ணுபிரியா விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், 2015 செப். 18-ஆம் தேதி திருச்செங்கோட்டில் உள்ள இல்லத்தில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தி தற்கொலை என முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் இருக்கும் தீரன் சின்னமலை கவுண்டா் பேரவையின் நிறுவனத் தலைவா் யுவராஜ், நாமக்கல் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 1-இல் திங்கள்கிழமை மனுத்தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்ட வழக்கு சிபிஐயால் ஏற்கெனவே முடித்துவைக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என்பதால், மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதைய நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஆா்.செந்தில்குமாா், டிஎஸ்பி ராஜு, திருச்செங்கோடு காவல் ஆய்வாளா் சக்கரபாணி ஆகியோரிடம் மீண்டும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து யுவராஜ் வழக்குரைஞா் கணேஷ்குமாா் கூறுகையில், டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்ட வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி யுவராஜ் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளோம். மீண்டும் அந்த வழக்கு தொடா்பான ஆவணங்களை சரிபாா்த்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.