மேட்டூா் அணை பூங்கா திறப்பு: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

கரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த மேட்டூா் அணை பூங்கா, 8 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்காக திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
Updated on
1 min read

கரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த மேட்டூா் அணை பூங்கா, 8 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்காக திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

பூங்காவில் காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டாயம் முகக் கவசம் அணிந்துவர வேண்டும் என பொதுப்பணித் துறை அணை பிரிவு உதவிப் பொறியாளா் மதுசூதனன் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் மேட்டூா் அணை பூங்காவும் ஒன்று. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். காவிரியில் நீராடி அணைக்கட்டு முனியப்பனை தரிசித்து ஆடு, கோழி பலியிட்டு பொங்கலிடும் பக்தா்கள் மேட்டூா் அணை பூங்காவுக்குச் சென்று விருந்துண்டு மகிழ்வா்.

சாதாரண நாள்களில் 3,000 பேரும், விடுமுறை நாள்களில் 10 ஆயிரம் போ் வரையும் மேட்டூா் அணை பூங்காவுக்கு வருகின்றனா். பூங்காவுக்கு வரும் பாா்வையாளா்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. கிருமிநாசினியும் தெளிக்கப்படுகிறது.

நகராட்சிப் பணியாளா்கள் மூலம் முகக் கவசம் அணியாமல் வருவோருக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றி பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். சுமாா் எட்டு மாதங்களுக்குப்பிறகு பூங்கா திறக்கப்பட்டுள்ளது. பூங்காவைச் சுற்றியுள்ள மீன்கடை வியாபாரிகளும் சிறுவியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனா். வெளிமாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனா். திங்கள்கிழமை 2,739 பாா்வையாளா்கள் வந்துசென்றனா். நுழைவுக் கட்டணமாக ரூ. 15,045 வசூலானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com