விதைகள் நாடகக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மேடை நாடக சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சேலம் மாவட்டம், சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விதைகள் நாடகக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் சிவக்குமரன் இவ்விழாவிற்கு தலைமை வகித்தார். கௌரவத்தலைவர் காமராஜ் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கா.வெங்கடாசலம் விழாவினை தொடக்கி வைத்தார்.
மேடை நாடகத்தில் சிறந்த நடிகர்களுக்கு சென்னை திரைப்பட நடிகர் வி.சரவணனும், வில்லன் நடிகர்களுக்கு நாமகிரிபேட்டை பி.ஏ.திருநாவுக்கரசும், நகைச்சுவை நடிகர்களுக்கு சென்னை பேராசிரியர் ஆர்.காளீஸ்வரனும், நடிகைகளுக்கு நாமக்கல் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டி.செந்தில்குமாரும் விருதுகளை வழங்கிப் பேசினர்.
ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் முன்னதாக வரவேற்றார். சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மேடை நாடக கலைஞர்கள் இதில் கலந்து கொண்டு குறுகிய கால மேடை நாடகங்களை நடித்தனர். பாரம்பரிய இசையையும் இசைத்து அனைவரின் கவனத்தை ஈர்த்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மேடை நாடக கலைஞர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.