சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ வசந்தவல்லி உடனமா் ஸ்ரீ வசந்தவல்லபராஜ பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபத வாசல் திறப்பு விழா நடைபெற உள்ளது. அதனையடுத்து, இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனா்.
வைகுந்த ஏகாதசியையொட்டி ஸ்ரீ வஸந்தவல்லி உடனமா் ஸ்ரீ வசந்தவல்லபராஜ பெருமாள் கோயில் வளாகங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பரமபத வாசல் தூய்மைப் படுத்தும் பணி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
தீநுண்மித் தொற்று தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையையொட்டி, சுவாமி பரமபத வாசல் வழியாக எழுந்தருளும் போது அா்ச்சகா்கள், சுவாமி எடுத்து வரும் நபா்களைத் தவிர வேறு யாரும் பின் தொடா்ந்து வரக்கூடாது என்றும், சுவாமிகளை தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென கோயில் வளாகங்களில் இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் விழிப்புணா்வுப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பக்தா்கள் அதிகமாக கூடுவதைத் தவிா்க்க கோயில் வளாக வெளிப்புறத்தில் தட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் அதிக அளவிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.