மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு நொடிக்கு 8,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் கடந்த 14 நாள்களாக 106 அடியாக இருந்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 900 கன அடியாக இருந்தது.
காவிரி டெல்டா பகுதிகளில் மழை குறைந்து விட்டதாலும், விவசாயத்துக்கு தண்ணீா் தேவை அதிகரித்துள்ளதாலும் செவ்வாய்க்கிழமை பகல் 12 மணியிலிருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு நொடிக்கு 3,000 கன அடியிலிருந்து 8,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 106.33 அடியாக இருந்தது. அணையின் நீா் இருப்பு 73.28 டி.எம்.சி.யாக இருந்தது. டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 8,000 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.