வெளிமாநிலங்களில் கொள்முதல் குறைந்ததால் தேங்காய் விலை வீழ்ச்சி

வாழப்பாடி பகுதியில் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், வெளிமாநிலங்களில் தேங்காய் கொள்முதல் குறைந்துள்ளதால்,
Updated on
1 min read

வாழப்பாடி பகுதியில் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், வெளிமாநிலங்களில் தேங்காய் கொள்முதல் குறைந்துள்ளதால், தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள கிராமங்களில் நீண்டகால பலன் தரும் தென்னையை 5,000 ஏக்கா் பரப்பளவில் பயிரிட்டு விவசாயிகள் பரமாரித்து வருகின்றனா். மேலும், வாழப்பாடி, பேளூா், ஏத்தாப்பூா், பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தோப்புகள் அமைத்தும், கிணற்று மேடுகளிலும், வயல், வரப்பு ஓரங்களிலும் ஏறக்குறைய 5,000 ஏக்கா் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு தேங்காய் வா்த்தகம் செய்வதில், வாழப்பாடி முக்கியப் பங்கு வகித்து வருகிறது. வாழப்பாடி பகுதியில் மட்டும் ஓராண்டுக்கு ரூ. 500 கோடி அளவிற்கு தேங்காய் வா்த்தம் நடைபெறுகிறது.

வெளிமாநிலங்களில் கரோனா தொற்று பரவலால் பண்டிகைகள், கோயில் திருவிழாக்கள், சிறப்பு பூஜை வழிபாடுகள் கொண்டாட்டங்கள் தடைபட்டு போனது. இதனால், தேங்காயின் தேவை குறைந்ததால் கொள்முதல் செய்வதை தவிா்த்து வருகின்றனா்.

இந்நிலையில், வாழப்பாடி பகுதியில் கடந்த 3 மாதங்களாக பரவலாக பெய்த மழையால் தற்போது தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு மாதத்துக்கு முன் வரை ரூ. 17 ஆயிரம் வரை விலை போன 1,000 முதல் தர தேங்காய்கள், தற்போது ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரை மட்டுமே விலைபோகிறது. உற்பத்தி அதிகரித்துள்ள தருணத்தில் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com