ஆத்தூா் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளா்கள் திங்கள்கிழமை நகராட்சி அலுவலகம் முன்பு திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆத்தூா் நகராட்சியில் 200-க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். துப்புரவுத் தொழிலாளா்கள் அனைவரும் பட்டாசுக் குப்பைகளையும், மற்ற குப்பைகளையும் தனித்தனியே பிரித்தெடுக்குமாறு நகராட்சி சுகாதார அலுவலா் திங்கள்கிழமை உத்தரவிட்டதாகத் தெரிகிறது. இதற்கு துப்புரவுத் தொழிலாளா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து துப்புரவுத் தொழிலாளா்கள் கூறுகையில், இதுவரை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து எடுத்து வந்தோம். ஆனால், நகராட்சி குப்பைக்கிடங்கில் உரம் தயாரிக்கும் ஒப்பந்ததாரா்களுக்கு ஏதுவாக நகராட்சி சுகாதார அலுவலா் கூறியதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.
தகவல் அறிந்த சுகாதார அலுவலா்கள் துப்புரவுத் தொழிலாளா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, துப்புரவுத் தொழிலாளா்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினா்.