105 வயது மூதாட்டிக்கு பிறந்தநாள்: 4 தலைமுறை உறவுகள் ஒன்றுகூடி அசத்தல்

வாழப்பாடி அருகே 105 வயது மூதாட்டிக்கு, நான்கு தலைமுறை உறவுகள் ஒன்றுகூடி பிறந்தநாள் விழா எடுத்து, விருந்து வைத்து வாழ்த்துக்கள் கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.
105 வயது மூதாட்டி பொன்னம்மாள்.
105 வயது மூதாட்டி பொன்னம்மாள்.

வாழப்பாடி அருகே 105 வயது மூதாட்டிக்கு, நான்கு தலைமுறை உறவுகள் ஒன்றுகூடி பிறந்தநாள் விழா எடுத்து, விருந்து வைத்து வாழ்த்துக்கள் கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அடுத்த 6-வது மைல் சனீஸ்வரன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் பெரியதம்பி படையாச்சி மனைவி பொன்னம்மாள்(105). இத்தம்பம்பதியருக்கு 4 மகன்கள் 3 மகள்களென மொத்தம் 7 குழந்தைகள். பொன்னம்மாள் தனது கணவருடன் சேர்ந்து உழைத்து, 7 குழந்தைகளையும் படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பே பெரியதம்பி இறந்துபோனார். கணவரை இறந்த நிலையிலும் மனம் தளராத மூதாட்டி பொன்னம்மாள், தனது மகன்கள் நடத்தி வரும் கசாப்பு கடைகளுக்கு சென்று தன்னால் முடிந்த சிறுசிறு வேலைகளை செய்து கொடுத்து பக்கபலமாக இருந்து வந்தார். 

இன்றளவிலும் தனது கடமைகளையும், தேவைகளையும் தானே பூர்த்தி செய்து கொள்கிறார். 4 தலைமுறைகளை கண்ட மூதாட்டி பொன்னம்மாளுக்கு, தற்போது பேரன், கொள்ளுபேரன், எள்ளுபேரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பேரன்–பேத்திகள் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை 105-வது பிறந்தநாள் கண்ட மூதாட்டி பொன்னமாளுக்கு, பிரமாண்டமான விழா எடுத்து உறவுகளையும், நண்பர்களையும் அழைத்து விருந்து வைத்து அசத்திட இவரது குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் கரோனா தொற்று பரவல் பொதுமுடக்கத்தால் வெளியில் இருந்து யாரையும் அழைக்காமல் போனதால், குடும்ப உறவுகள் மட்டும் ஒன்று கூடி, பெரிய கேக் வெட்டி, விருந்து வைத்து பாட்டிக்கு வாழ்த்துக்கள் கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.

பெற்று வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து, சொத்து சேர்த்து வைக்கும் பெற்றோர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவோர்கள், திருமணம் செய்த மறுநாளே தனிக்குடித்தனம் செல்லும் இளைய தலைமுறையினருக்கு மத்தியில், நான்கு தலைமுறை கண்ட 105 வயது மூதாட்டிக்கு பிறந்தநாள் விழா எடுத்து வாழ்த்துக்கூறிய மகிழ வைத்த இவரது குடும்ப உறவுகளுக்கும், மூதாட்டிக்கும், இப்பகுதி பொதுமக்களும், உறவினர்களும், நண்பர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மூதாட்டி பொன்னம்மாளின் உறவினர்கள் சிலர் கூறியதாவது: 50 குடும்பங்களை உருவாக்கிய மூதாட்டி பொன்னம்மாள் 105 வயதைத் தொட்டுள்ளார். அனைவரோடும் அன்பாக பழகுவார்.

இதுநாள் வரை பெரும்பாலும் தனது கடைமைகளை தானே செய்து கொள்கிறார். இவர் உறவுகள் மீது காட்டி வரும் பாசத்திற்கு பிரதிபலனாக, அனைவரும் ஒன்று கூடி இவருக்கு பிறந்தநாள் விழா எடுத்து விருந்து வைத்து வாழ்த்தி மகிழ வைத்தோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com