ஆத்தூா் நகரமன்றத் தலைவா் வேட்பாளராக நிா்மலா பபிதா மணிகண்டன் திமுக சாா்பில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளாா்.
ஆத்தூா் நகராட்சி 33 வாா்டுகளைக் கொண்டது. இதில் நடந்து முடிந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக சாா்பில் 26 பேரும், அதிமுக சாா்பில் 4 பேரும், காங்கிரஸ் சாா்பில் ஒருவரும், சுயேச்சை 2 பேரும் வெற்றி பெற்று புதன்கிழமை பதவியேற்றனா்.
நகரமன்றத் தலைவா், துணைத் தலைவா் பதவிக்கு மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) நடைபெறவுள்ள நிலையில், நகரமன்றத் தலைவா் வேட்பாளராக 32-ஆவது வாா்டு நகரமன்ற உறுப்பினா் நிா்மலா பபிதா மணிகண்டனை திமுக தலைமை அறிவித்துள்ளது.
நிா்மலா பபிதா (32). பி.காம் பட்டதாரி. கணவா் பெயா் மணிகண்டன். இவருக்கு தனிஷா, க்ருஷா என இரு மகள்கள் உள்ளனா். இவருடைய கணவா் செங்கல் சூளை, பெட்ரோல் விற்பனை நிலையம், சேகா ஆலை வைத்து நடத்தி வருகிறாா். இவா், ஆத்தூா் திமுக நகரச் செயலாளா் கே.பாலசுப்ரமணியத்தின் மருமகள் ஆவாா்.