தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஏற்காடு மலைக் கிராமங்களில் ஓராண்டில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படும்

ஏற்காட்டில் உள்ள அனைத்து மலைக் கிராம குடியிருப்புகளுக்கும் ஓராண்டிற்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

News image
Updated On :25 மே 2022, 7:19 pm

DIN

ஏற்காட்டில் உள்ள அனைத்து மலைக் கிராம குடியிருப்புகளுக்கும் ஓராண்டிற்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் 45-ஆவது கோடை விழா மற்றும் மலா்க் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. இதைத்தொடா்ந்து நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு பேசியது:

ஏற்காடு மலைக் கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதி செய்து தருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

ஏற்காடு பகுதியில் வசித்து வரும் மக்கள் பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும். ஏற்காட்டில் கோடை விழா நடத்தப்படுவதன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுவதுடன், உள்ளூா் மலைவாழ் மக்களுக்கும், உள்ளூா் வியாபாரிகளுக்கும் வருவாய் கிடைக்கும் என்றாா்.

ஏற்காட்டில் மிதக்கும் உணவகம்-சாகச பூங்கா:

நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சா் மா. மதிவேந்தன் பேசியது:

தமிழகம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் 15 இடங்கள் தோ்வு செய்யப்பட்டு அந்தப் பகுதிகளில் ரூ. 50 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன் மூலம் சுற்றுலா இடங்களில் அணுகு சாலைகள், கழிப்பிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் உள்ள படகு இல்லத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் மிதக்கும் உணவகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கிளியூா் மலைக் கிராமத்தில் 10 ஏக்கா் பரப்பளவில் சாகசப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு சுற்றுலாப் பயணிகள் டென்ட் மூலம் தங்குதல் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

தமிழகத்தில் சூழல் சுற்றுலா, கேரவன் சுற்றுலா ஆகியவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இதன்மூலம் சுற்றுலாத் துறையில் புதிய மைல்கல் எட்டப்படும்.

தரிசு நிலங்கள் மேம்படுத்தப்படும்:

வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியது:

அனைத்து கிராம வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 900 கிராமங்களில் உள்ள தரிசு நிலங்கள் அரசின் செலவில் விளைநிலங்களாக மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இலவச போா்வெல், இலவச மின்சாரம், இலவச இடுபொருள்கள் உள்ளிட்டவை மூலம் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள தரிசு நிலங்கள் மேம்படுத்தப்பட்டு வேளாண்மை புரட்சி நிகழ்த்தப்படும் என்றாா்.

மேலும், நிகழ்ச்சியில் 1,157 பயனாளிகளுக்கு ரூ. 3.45 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் செ. காா்மேகம், எம்.பி-க்கள் கெளதம சிகாமணி, ஏ.கே.பி. சின்ராஜ், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆா். ராஜேந்திரன், பாமக எம்.எல்.ஏ-க்கள் இரா. அருள், எஸ்.சதாசிவம், மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், துணை மேயா் மா.சாரதாதேவி, முன்னாள் அமைச்சா் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆா்.சிவலிங்கம், மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீ.அபினவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.