எடப்பாடி: ஆடி அமாவாசை தினமான இன்று (வியாழன்) காலை காவிரி ஆற்றங்கரையில் திரண்ட பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து, தர்ப்பண பூஜை செய்தனர்.
எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி கைலாசநாதர் ஆலயம் முன்பு அமைந்துள்ள காவிரி படித்துறை, படகு துறை, விநாயகர் ஆலயம், காவிரித்தாய் திருக்கோவில், நந்திகேஸ்வரர் சன்னதி உள்ளிட்ட காவிரி ஆற்றங்கரை பகுதியில் இன்று அதிகாலை முதலே பெரும் திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து. தர்ப்பண பூஜை செய்தனர். பூஜையில் வைத்து படைக்கப்பட்ட சாதம், எள் உள்ளிட்ட உணவு வகைகளை காகங்களுக்கு கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆடி அமாவாசை ஒட்டி பூலாம்பட்டி காவிரி கரை கைலாசநாதர் ஆலயம், நவகிரக சன்னதி, பசுபதீஸ்வரர் திருக்கோவில், காவிரி கரை கணபதி சன்னதி, அங்காள பரமேஸ்வரி ஆலயம் உள்ளிட்ட திருத்தலங்களில் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது காவிரி ஆற்றில் கூடுதலான அளவில் வெள்ளப்பெருக்கு இருந்து வரும் நிலையில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.