வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மாவட்ட அளவிலான ஐவர் அணி கால்பந்து போட்டி இரு தினங்கள் நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.
வாழப்பாடியில் என்.ஜி.ஆர், 149 கபடி குழு மற்றும் அண்ணாமலை ஜூவல்லர்ஸ் சார்பில் ஐவர் அணி கால்பந்து போட்டி இரு தினங்கள் நடைபெற்றது.
வாழப்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திடலில் சனிக்கிழமை காலை நடைபெற்ற விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கலைஞர் புகழ் தலைமை வகித்து, போட்டியை துவக்கி வைத்தார். பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் எம்ஜிஆர் பழனிசாமி, சாய்பாபா அறக்கட்டளை தலைவர் ஜவஹர் ஆகியோர் வீரர்களை வரவேற்றனர்.
இந்த போட்டியில் சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 25 அணிகள் பங்கேற்றன. இதில் சேலம் அவரஞ்சிஅம்மா அணி முதல் பரிசும், 149 அணி இரண்டாம் பரிசும், வாழப்பாடி கருடன் மூன்றாம் பரிசும், வித்யா மெமோரியல் அணி நான்காம் பரிசும் பெற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், ரொக்கப்பரிசு சிறந்த வீரர்களுக்கு பதக்கங்களை கவிஞர் மன்னன், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் எம்.கோபிநாத், ஆர்.குணாளன் ஆகியோர் வழங்கி பாராட்டினர். போட்டிக்கான ஏற்பாடுகளை கபடி குழு நிர்வாகிகள் ராம், உதயகுமார், நித்தீஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
இதையும் படிக்க: சியோலில் இரவு நேர சுரங்கப்பாதை சேவை ஆகஸ்டில் மீண்டும் தொடக்கம்