சேலத்தில் வங்கி நகை மதிப்பீட்டாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பவர், கடந்த பத்து வருடங்களாக மனைவி, மகன் மற்றும் மகளுடன் சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பொன் நகர் பகுதியில் வசித்து வந்தார். இவர் ஸ்ரீரங்கபாளையம் பகுதியில் உள்ள தேசிய வங்கியில் நகை மதிப்பீட்டாளர் ஆக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தற்கொலை செய்து கொண்டதை அறிந்த வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமலேயே மோகன்தாஸ் மாரடைப்பால் இறந்துவிட்டார் என உறவினர்களுக்கு தெரிவித்துவிட்டு இறுதிச்சடங்கு செய்ய மோகன் தாஸின் உடலைை ஃப்ரீசர் பாக்சில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தற்கொலைை செய்வதற்கு முன்பு தற்கொலைக்கான காரணம் குறித்து மோகன்தாஸ் பதிவு செய்த விடியோ வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மோகன்தாஸ் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் மோகன்தாஸ் வெளியிட்ட வீடியோவில் தான் சம்பாதித்த பணம் மற்றும் நகையை தன் மனைவி இமாகுலேட் மேரியிடம் இருந்து அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி மற்றும் அவருடைய மகள் சுபா ஆகியோர் பெற்றுக்கொண்டு தர மறுப்பதாகவும் தற்போது தன்னுடைய மகன் மற்றும் மகள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த நிலையில் மேற்படிப்புக்காக கட்டணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதையும் படிக்க- ராகுல் காந்தி பிறந்த நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
மேலும் அவருடைய தற்கொலைக்கு சாந்தி, சுபா மற்றும் சூரமங்கலத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி கடந்த மாதம் 31 ஆம் தேதி ஓய்வுபெற்ற சேகர் ஆகிய மூன்று நபர்கள் தன் தற்கொலைக்கு காரணம் என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் சூரமங்கலம் காவல் நிலையத்தில் பணம் தொடர்பாக புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் காவல் நிலையத்தில் பணிபுரியும் பாபு என்பவர் எதிர் தரப்பினருக்கு எழுதி வாங்கிக் கொண்டதாக புகார் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து டிஜிபி மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், யாரிடம் புகார் தெரிவித்தாலும் ஒன்றும் நடக்காது எனக் கூறி கொலை மிரட்டல் விடுப்பதாகவும் விடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தத் தற்கொலை குறித்து சூரமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.