சேலத்தில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது மாலை நேரத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை மழை பெய்யத் தொடங்கியது.
ஆரம்பத்திலேயே மிகவும் வேகமாக பெய்த மழை சுமார் ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கியது. சேலம் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, புதிய பேருந்து நிலையம், ஆட்சியர் அலுவலக வளாகம், சூரமங்கலம், பள்ளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் வாகனங்களை சாலையில் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனிடைய சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்க கட்டிடத்தில் திடீரென தண்ணீர் புகுந்ததால் ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
இதையும் படிக்க | ஹரியாணாவில் காவலரை அடித்து இழுத்துச் சென்ற இளைஞர் கைது
சங்கக் கட்டிடத்தில் இயங்கி வந்த கூட்டுறவு வங்கி, மளிகை பொருட்கள் விற்பனை அங்காடி மற்றும் கூட்ட அரங்கம் ஆகியவை பாதிக்கப்பட்டன. திடீரென வெள்ளம் புகுந்ததால் ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தனர். இதேபோல சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துதால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.