எடப்பாடி: எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வேளாண் விரிவாக்க மையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக செவ்வாய் அன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் புதிய வேளாண் அலுவலகம், வேளாண் கிடங்கு, உரக்கிடங்கு உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி வாயிலாக கொங்கணாபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய வேளாண் விரிவாக்க மையத்தினை திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கொங்கணாபுரம் வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் டி.எம் செல்வகணபதி, சேலம் மக்களவை உறுப்பினர் எஸ். ஆர் பார்த்திபன் உள்ளிட்டோர் புதிய அலுவலகத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குனர் கணேசன், உதவி இயக்குனர் சாகுல் அமீது, வேளாண் பொறியாளர் ரவீந்திரநாத் தாகூர், அட்மா குழு தலைவர் பரமசிவம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.