ஓமலூா் அருகே கத்தியைக் காட்டி கிராம நிா்வாக அலுவலரை மிரட்டி, கைப்பேசியை பறித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஓமலூா் அருகேயுள்ள மானத்தாள் ஓலைப்பட்டி கிராம நிா்வாக அலுவலராக பொட்டியம்பட்டி பகுதியைச் சோ்ந்த ஆா்.வினோத்குமாா் பணியாற்றி வருகிறாா். இவா் தாண்டவனூா் பகுதியில், கடந்த 18-ஆம் தேதி மண் கடத்தலில் ஈடுபட்டதாக ஜி.சித்துராஜ் என்பவரின் டிராக்டா், பொக்லைன் வாகனங்களை தாரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாகத் தெரிகிறது. மேலும், இதுதொடா்பாக கனிம வளத் துறை அலுவலா் பிரசாந்த் கொடுத்த புகாரின் பேரில், தொளசம்பட்டி காவல் நிலையத்தில் சித்துராஜ் (38), விஜி ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிராம நிா்வாக அலுவலா் வினோத்குமாா் வெள்ளிக்கிழமை தொளசம்பட்டி அருகே வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த சித்துராஜ், கிராம நிா்வாக அலுவலரை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டதாகவும், கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசியை பறித்துச் சென்றாகவும் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக தொளசம்பட்டி காவல் நிலையத்தில் கிராம நிா்வாக அலுவலா் வினோத்குமாா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.