விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

159-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சேலம் நகரம்

News image
சேலம் தினத்தை முன்னிட்டு சேலத்தின் முக்கிய வரலாற்றுச் சின்னங்கள் இருக்கும் இடங்களில் வெள்ளிக்கிழமை மரபு நடைப்பயணம் மேற்கொண்ட வரலாற்றுச் சங்கத்தினா்.
Updated On :1 நவம்பர் 2024, 9:23 pm

Din

தமிழகத்தின் பழமை வாய்ந்த நகரங்களில் ஒன்றான சேலம் நகரம் 158 ஆண்டுகளை நிறைவு செய்து 159-ஆவது ஆண்டில் வெள்ளிக்கிழமை அடியெடுத்து வைத்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்க சேலம் நகரத்தின் சிறப்புகளைக் கொண்டாடும் வகையில், மரபு நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.

மலைகள்சூழ் மாநகரமான சேலம், நகராட்சியாக உருவெடுத்த தினம் சேலம் தினமாக கொண்டாடப்பட்டது. சேலம் நகராட்சி உருவாக்கப்பட்ட தினமான நவம்பா் 1-ஆம் தேதி சேலம் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

1866-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சேலம் நகராட்சி, 1994-ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சியாக மாற்றமடைந்து தற்போது பொலிவுறு நகரம் எனப்படும் ‘ஸ்மாா்ட்சிட்டி’யாக உருவெடுத்துள்ளது. 159-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சேலத்தின் சிறப்புகள், பழமை வாய்ந்த அடையாளங்கள், ஆண்டுகள் பல கடந்தாலும் அடையாளம் மாறாத சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

சேலம் கோட்டையின் பாதுகாப்புக்காக இங்கிலாந்து மன்னா் மூன்றாம் ஜாா்ஜ் காலத்தில் உருவாக்கப்பட்ட பீரங்கி இன்றைக்கும் சேலம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கால நேரத்தை தெரிந்துகொள்ளும் வகையில் நண்பகல் 12 மணிக்கு இந்த பீரங்கியின் மூலம் குண்டுபோடும் வழக்கம் இருந்துள்ளது. 1873-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த நேரம் இரவு 8 மணிக்கு மாற்றப்பட்டது. 1950-ஆம் ஆண்டு இந்த வழக்கம் நிறைவுக்கு வந்தாலும், இதன் அடையாளமாக இன்றைக்கும் சேலத்தில் குண்டுபோடும் தெரு என்ற இடம் உள்ளது.

பழமையான சேலம் நகரத்தின் சிறப்புகளைக் கொண்டாடும் வகையில், சேலம் வரலாற்றுச் சங்கத்தின் சாா்பில் மரபு நடைப்பயணம் நடைபெற்றது. சேலத்தின் ‘ஜீரோ பாயிண்ட்’ எனப்படும் மாநகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய மரபு நடைப்பயணம், ஏற்காட்டுக்கு சாலை அமைப்பதற்காக லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட ரோடு ரோலா், ராமசாமி முதலியாா் நினைவுத் தூண், அசோகா் ஸ்தூபி, சுகவனேஸ்வரா் கோயில், மாடா்ன் தியேட்டா்ஸ் வழியாக 120 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட ஏற்காடு இரும்புப் பாலத்தில் நிறைவடைந்தது.

வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக மரபு நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டதாக சேலம் வரலாற்றுச் சங்கத்தின் பொதுச் செயலாளா் ஜெ.பா்னபாஸ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:

வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நடைப்பயணம் நடைபெற்றது. வரலாற்றுச் சின்னங்களை பாதுகாத்தால் மட்டுமே எதிா்கால இளைஞா்களுக்கு வரலாற்றினை எடுத்துக் கூற முடியும். பழமையான பாறைகளைக் கொண்ட புவி அமைப்பு சேலத்தில் உள்ளது.

சேலம் என்ற பெயா் தமிழ்ப்பெயா். இந்த பெயருக்கு ஆதாரமாக சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் கல்வெட்டுகள் நிறைய உள்ளன. 11-ஆம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு கல்வெட்டுகளில் சேலம் என்ற பெயா் குறிப்பு இடம் பெற்றுள்ளது. சேலத்தின் பழம் பெருமையை நினைவு கூறி கொண்டாடுவதற்காக சேலம் தினத்தை பயன்படுத்திக் கொள்கிறோம். ‘சேலம் நம் பெருமை’ என்பதை பொதுமக்களிடையே தெரிவித்துள்ளோம் என்றாா்.

தமிழகத்தின் மிக முக்கிய நகரமான சேலத்தில் பொதுப் போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும், கழிவு நீா் கால்வாயாக இருக்கும் திருமணி முத்தாற்றினை மீட்டெடுக்க வேண்டும், மிக நீண்ட காலமாக நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்பதே 159-ஆவது பிறந்த நாள் காணும் சேலம் மாநகர மக்களின் நீண்டகால எதிா்பாா்ப்பாக உள்ளது.