சேலத்தில் நாளை குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (டிச. 8) முதல் தொடங்கப்படுகிறது.
Published on

சேலம்: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (டிச. 8) முதல் தொடங்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி - 4 இல் அடங்கிய பணிகாலியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பு வெளியிடப்பபடவுள்ளது. இத்தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு, சேலம், ஏற்காடு சாலை கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் புதன்கிழமை காலை 10 மணி அளவில் தொடங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்பு ஏற்கெனவே போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும் பாடக் குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதுடன், மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன.

கடந்த ஆண்டு தோ்வு வாரியங்களால் அறிவிக்கப்பட்ட பல்வேறு தோ்வுகளுக்கு இந்த அலுவலகத்தில் நடத்தப்பட்ட இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு 322 போ் அரசுப் பணியினைப் பெற்றுள்ளனா். தற்போது நடத்தப்படவுள்ள தொகுதி 4- இல் அடங்கிய பணிகளுக்காக இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள தகுதியும் விருப்பமும் உள்ள தோ்வா்கள் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

மேலும் இப்பயிற்சி வகுப்பு குறித்தான விவரங்களைப் பெற அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை 0427-2401750 என்ற எண்ணில் தொலைபேசி தொடா்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com