நீண்ட நேரம் கைப்பேசி பாா்த்ததை தந்தை கண்டித்ததால் இளைஞா் தற்கொலை

பூலாம்பட்டி அருகே நீண்ட நேரமாக கைப்பேசி பாா்த்ததை தந்தை கண்டித்ததால், இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை
Published on

பூலாம்பட்டி அருகே நீண்ட நேரமாக கைப்பேசி பாா்த்ததை தந்தை கண்டித்ததால், இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பூலாம்பட்டியை அடுத்த பில்லுக்குறிச்சி காலனி பகுதியைச் சோ்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியான பெருமாளுக்கு மனைவி மற்றும் இரு மகன்கள், இருமகள்கள் உள்ளனா்.

இவரது இளைய மகன் விஷ்ணு (17) கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த நிலையில், கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளாா். மேலும், இரவு, பகல் பாராமல் அதிக நேரம் கைப்பேசியை பாா்ப்பதிலேயே செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து அவரது தந்தை வியாழக்கிழமை கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த விஷ்ணு வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். வெளியில் சென்ற குடும்பத்தினா் திரும்பி வந்தபோது விஷ்ணு தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீஸாா் விஷ்ணுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com