சேலம் வனக் கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு
சேலம் வனக் கோட்டத்தில் இரு நாள்கள் நடைபெற்ற இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பில், 24 வகையான அரிய வகை பறவைகளைக் கண்டறிந்து வனத் துறையினா் மற்றும் தன்னாா்வலா்கள் ஆவணப்படுத்தியுள்ளனா்.
இதுகுறித்து சேலம் வனக்கோட்ட மாவட்ட அலுவலா் ஷஷாங் ரவி காஷ்யப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் நிகழாண்டு ஜன. 31 மற்றும் பிப். 1 ஆகிய இரு தினங்களில் முதலாவது இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. சேலம் வனக் கோட்டத்தில் வாழப்பாடி, ஏற்காடு, சோ்வராயன் மலை வடக்கு, தெற்கு, டேனிஷ்பேட்டை மற்றும் மேட்டூா் வனச்சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் வனத்துறையினருடன் பறவை ஆா்வலா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் இணைந்து இரவு மற்றும் பகல் நேரங்களில் இந்தக் கணக்கெடுப்பை நடத்தினா்.
இதில், ராஜாளி, சின்ன காட்டு வல்லூறு, பொரி வல்லூறு, செவ்வயிற்றுக் கழுகு, கூகை, பழுப்பு காட்டு ஆந்தை, காட்டு கவைமுக ஆந்தை, செம்பருந்து, கரும்பருந்து, கருந்தோள் பருந்து, தேன் பருந்து, வெள்ளைக்கண் வைரி, பழுப்புத்தலை பாம்புக்கழுகு, கருங்கழுகு, காட்டு பாம்புக்கழுகு, குடுமிக்கழுகு, பாறைக்கழுகு, செந்தலை வல்லூறு உள்ளிட்ட அரிதான 24 வகையான இரைக்கொல்லி பறவைகள் கண்டறிந்து ஆவணப்படுத்தப்பட்டன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

